பெ.நா.பாளையம்: கோவை, துடியலூர் அருகே பன்னிமடை ஊராட்சியில் கண்ணபிரான் நகர், கொண்டசாமி நகர் உள்ளன. கொண்டசாமி நகரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் 150 வீடுகள் உள்ளன. அங்கு செல்லும் வழியை அடைத்து அருகே உள்ள கண்ணபிரான் நகர் நில உரிமையாளர்கள் தீண்டாமைச்சுவர் எழுப்பியுள்ளதாக பொதுமக்கள் சமீபத்தில் கலெக்டருக்கு புகார் தெரிவித்தனர். இந்த சுவர் மூலம் கொண்டசாமி நகருக்கு 2 கி.மீ. சுற்றி சென்று வர வேண்டி இருந்தது. ஆனால், இந்த சுவர் பொதுமக்களின் பாதுகாப்புக்காக கட்டியதாக வீட்டு மனை விற்பவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி கோவை வடக்கு தாசில்தாரர் கோகிலாமணி, வருவாய் ஆய்வாளர் ஆகாஷ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, இரண்டு பகுதிக்கும் அனைத்து தரப்பு மக்களும் சென்று வருவதற்காக குறிப்பிட்ட தூரம் வரை பொக்லைன் இயந்திரம் கொண்டு தீண்டாமை சுவரை நேற்று இடித்து அகற்றினர். இதுபற்றி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்….
The post கோவை அருகே தீண்டாமை சுவர் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.